படத்திற்காக போடப்பட்ட செட்டை மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்த பிரபாஸ் படக்குழு
பிரபாஸின் பிரம்மாண்ட படத்திற்காக போடப்பட்ட செட் ஒன்றை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர்.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்.
அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்துக்காக போடப்பட்ட மருத்துவமனை செட் ஒன்றின் பெரும்பாலான பகுதிகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள படக்குழுவினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி அந்த செட்டில் உள்ள 50 படுக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள், பிபிஇ கிட் உடைகள் ஆகியவற்றை தனியார் மருத்துவமனைக்கு கொடுத்து உதவி உள்ளனர். ராதே ஷ்யாம் படக்குழுவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.