"என்னை செதுக்கியது இவர்தான்" - கௌதம் மேனனை மேடையிலேயே புகழ்ந்து தள்ளிய சூர்யா!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டு கால சினிமா பயண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். காக்க காக்க திரைப்படம் தனது அடையாளத்தை மாற்றியதாக கூறிய சூர்யா, கௌதம் மேனன் போன்ற இயக்குநர்களே சினிமாவுக்கான பிரம்மாக்கள் என குறிப்பிட்டார்.
தமிழ் திரையுலகில் ஸ்டைலிஷ் மேக்கராக வலம் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு கௌதம் மேனன் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
விழாவின் தொடக்கத்திலேயே சூர்யா ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற எனர்ஜியான "அஞ்சல" பாடலுக்கு, மேடையிலேயே கௌதம் மேனனுடன் இணைந்து சூர்யா நடனமாடினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த ஹிட் கூட்டணியை ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள், ஆரவாரத்தால் அரங்கையே அதிர வைத்தனர்.