A R Rahman: சினிமாவில் எனக்கு நண்பர்களே இல்லை! ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைத் திறமையால் மட்டுமல்லாது, தனது எளிமையான குணத்தாலும் பலரது இதயங்களை வென்றவர். புகழின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதர், உறவுகளையும் நட்பையும் எவ்வாறு பார்க்கிறார் என்பது பலருக்கும் வியப்பளிக்கும் ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அவர் தனது நட்பு மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் குறித்துப் பகிர்ந்த கருத்துக்கள், ஒரு வெற்றிகரமான மனிதனின் மனப்பக்குவத்தை உலகுக்கு உணர்த்துகிறது.
திரையுலகம் என்ற ஒரு பெரிய வட்டத்திற்குள் இருந்தாலும், அங்கு தமக்கு என நண்பர்கள் யாரும் இல்லை என்று ரஹ்மான் வெளிப்படையாகக் கூறுகிறார். அவருக்குப் பிடித்தமான தனிமைதான் அவரது சிறந்த நண்பனாக இருக்கிறது. இருப்பினும், மனித உறவுகளின் தேவையை அவர் மறுப்பதில்லை. தன்னைச் சுற்றி நாள்தோறும் உழைக்கும் ஓட்டுநர்கள் மற்றும் சக பணியாளர்களையே அவர் தனது உண்மையான நண்பர்களாகக் கருதுகிறார். அவர்களே தனகுக்கு நண்பர்கள் என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்தஸ்து பார்க்காமல், உழைக்கும் வர்க்கத்திடம் அவர் காட்டும் இந்த நேசம் அலாதியானது.
ரஹ்மான் அவர்கள் தன்னுடன் இருப்பவர்களை வெறும் வேலையாட்களாகப் பார்ப்பதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். தன்னுடன் பணிபுரியும் ஒலிப் பொறியாளர்களிடம் "எவ்வளவு நாள் இங்கேயே இருக்கப் போகிறீர்கள்? அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்" என்று ஊக்கப்படுத்துவாராம். அதேபோல், ஒளிப்பதிவாளர்களிடம் நீங்கள் எப்போது இயக்குநராகப் போகிறீர்கள் என்று கேட்டு, அவர்களின் கனவுகளுக்குத் தூண்டுகோலாக இருப்பாராம்.
தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற ரஹ்மானின் எண்ணம், ஒரு தலைவனுக்குரிய மிகச்சிறந்த பண்பாகும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் மற்றவர்களைத் தங்களுக்குக் கீழே வைத்திருக்க நினைக்கும் உலகில், தன்னைச் சுற்றி இருப்பவர்களை மேலே தூக்கி விடத் துடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் குணம் போற்றுதலுக்குரியது. இந்த மனிதநேயமே அவரை உலக அரங்கில் தனித்துக் காட்டுகிறது.