இசை வெளியிட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பே இல்லை: 'விருமன்' படத்தில் பணிபுரிந்த பிரபலம் வருத்தம்!
சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி, அதிதிஷங்கர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’விருமன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது என்பதும் சிறப்பு விருந்தினர்களாக ஷங்கர், பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் ’வானம் கிடுகிடுங்க’ என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் பேசும்போது, ’விருமன்’ படத்தில் பாடல் எழுதிய எனக்கு அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை என்றும் இன்னும் கொஞ்ச காலத்தில் பாடலாசிரியர் என்ற இனமே இல்லாமல் போய்விடும் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.