பாரத் பாக்ய விதாதா: திரை விமர்சனம்
கங்கனா ரணாவத், கிரிஜா ஓக் நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள பாரத் பாக்ய விதாதா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
2008ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார் கீதா (கங்கனா ரணாவத்). சுமார் 16 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர், நோயாளிகளிடம் கனிவாகவும், பொறுமையுடன் நடந்து கொள்கிறார்.
என்றாலும் அவருக்கான அங்கீகாரம் என்பது மேலிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. அதனைப் பொருட்படுத்தாமல் இது சேவைப் பணி என்று கூறி வேலை பார்க்கிறார். அவருடன் கிரிஜா ஓக், ஸ்மிதா தம்பே, ப்ரியா பெர்டே ஆகியோரும் இணைந்து வேலைபார்க்கிறார்கள்.

ஆனால் அவர்கள் பார்க்கும் செவிலியர் வேலையை புரிந்துகொள்ளாமல், குடும்பத்தினர் பெரிதாக மரியாதை கொடுக்கவில்லை என்ற சோகம் அவர்களுக்கு உள்ளது. இந்த சூழலில் மும்பை ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல் நடக்கிறது. மருத்துவமனை அருகிலும் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்க, முதலில் அனைவரும் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர்.
பின்னர் செய்தியில் பார்க்கும்போது பயங்கரவாதிகள் மருத்துவமனை நோக்கி வரக்கூடும் என்று தெரிந்து கீதா உட்பட பலரும் அதிர்ச்சியடைகின்றனர். உடனே மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பணியாளர்களை பாதுகாக்க அனைவரும் சேர்ந்து முற்படுகின்றனர்.

அந்த சூழலில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வர, அவரை காப்பாற்றும் முயற்சியில் காவலர் ஒருவர் இறக்கிறார். பின்னர் பயங்கரவாதிகளிடம் இருந்து செவிலியர்கள் எப்படி கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து, நோயாளிகளையும் ஓர் இரவில் எப்படி காப்பாற்றினார்கள் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது காமா என்ற மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள், பணியாளர் எப்படி நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்களை காப்பாற்றினார்கள் என்ற சம்பவத்தை தழுவி மனோஜ் தபாடியா இப்படத்தை இயக்கியுள்ளார்.
செவிலியர் பணி எப்படிப்பட்டது; அவர்கள் வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளார் இயக்குநர். அதேபோல், பயங்கரவாத தாக்குதலில் துணிச்சலாக செயல்பட்டு பலரை காப்பாற்றிய நிகழ்வுகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது என்பதை செவிலியர்கள் அறிந்த பின்னர் படம் வேகமெடுக்கிறது. அதற்கு முன்பான காட்சிகள் அவர்களின் பொறுமை, கடமை போன்ற விஷயங்களை அழகாக காட்டுகின்றன. கீதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் தேர்ந்த நடிப்பை தந்துள்ளார்.
கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவர் அவரை திட்டுவதை பொறுத்துக் கொள்வதும், பின்னாளில் அவர் மன்னிப்பு கேட்கும்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாததும் என கீதா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் பயம், பதற்றம் இருந்தாலும் அவற்றை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் தனியறையில் உடைந்து அழும் காட்சியில் கங்கனா மிரட்டியிருக்கிறார்.

அவரைப் போலவே கிரிஜா ஓக், ஸ்மிதா தம்பே, ஈஷா டே உள்ளிட்ட செவிலியர் கதாபாத்திரங்கள் அனைவருமே நடிப்பது போல் இல்லாமல் உண்மையான செவிலியாளர்கள் போலவே இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளாக நடித்த இருவர் ஒவ்வொரு காட்சியிலும் பதை பதைக்க வைக்கின்றனர்.
கர்ப்பிணியை மேல்தளத்திற்கு கொண்டு செல்லும் காட்சி கண்டிப்பாக மனதை உலுக்கும். ஜீ.வி.பிரகாஷ் குமாரின் பாடல்களும், சஞ்சித் மற்றும் அங்கித்தின் பின்னணி இசையும் கதைக்கு உயிரோட்டம் தருகின்றன. அயன் சில்லின் ஒளிப்பதிவு பிரமாதம்; சிறப்பாக படத்தொகுப்பு செய்துள்ளார் தேவ் ராவ் ஜாதவ். கதை, திரைக்கதை நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் மனோஜ் தபாடியா
க்ளாப்ஸ்
நடிகர்கள்
காட்சிகள்
திரைக்கதை
இசை
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த பாரத் பாக்ய விதாதா செவிலியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

