விஜய்யுடன் செல்ஃபி எடுத்த எதிர்நீச்சல் கனிகா.. ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க.. என்ன சொன்னாங்க?
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று திருச்செந்தூருக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து இன்று ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரிசல்ட்டுக்கு முன்னதாக இப்படி அவர் ஏன் கோயில் கோயிலாக சுற்றுகிறார் என பலரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கனிகா விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது குறித்து எமோஷனலாக போஸ்ட் போட்டிருக்கிறார். அது ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளர் திடீரென தலைமறைவாகிவிட்டதால்; சுயேட்சை வேட்பாளரை அவர்கள் ஆதரிக்கும் நிலைமைக்கு சென்றார்கள். விஜய்யை பொறுத்தவரை திருச்சி கிழக்கிலும், பெரம்பூரிலும் போட்டியிட்டிருக்கிறார். விஜய் மட்டும் வெல்வாரா இல்லை கட்சியே வெல்லுமா அல்லது அனைத்து தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆகுமா என்பது மே நான்காம் தேதி தெரிந்துவிடும்.

கோயிலில் விஜய்: தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சிலரை தனது வீட்டுக்கு வரவழைத்து சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டார். அவரது ஆஸ்தான ஜோதிடர் சொல்படி அவர் இதை செய்ததாக தெரிகிறது. மேலும், அரசியல்வாதிகள் தங்கள் எதிரிகள் அழிவதற்கும், தங்கள் மன அமைதி மற்றும் வெற்றிக்காகவும் இந்த பூஜையை நிறைய முறை செய்திருக்கிறார்கள். அவர்கள் லிஸ்ட்டில் விஜய்யும் இப்போது சேர்ந்துவிட்டார்.
ஷீரடி சாய் பாபா கோயிலில்: திருச்செந்தூரில் நேற்று பூஜையை முடித்துவிட்டு சென்னை திரும்பிய அவர்; இன்று சென்னையிலிருந்து ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு தனி விமானம் மூலம் சென்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, விஷ்ணு ரெட்டியின் மகள்களும் சென்றார்கள். உடனே அந்த இரண்டு பெண்களில் ஒருவர் திரிஷா என்று காலையில் தகவல்கள் பரவின. ஆனால் அதனை தவெகவினர் ஆதாரப்பூர்வத்தோடு மறுத்துவிட்டார்கள். இந்நிலையில் எதிர்நீச்சல் நடிகை கனிகாவின் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யுடன் செல்ஃபி: அதாவது இன்று விஜய் ஷீரடியில் சாமி தரிசனம் செய்ய சென்றபோது அங்கே கனிகாவும் இருந்திருக்கிறார். உடனே விஜய்யுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் சோஷியல் மீடியாவில் அந்த செல்ஃபியை பகிர்ந்து, "அது நடந்துவிட்டது. அவருடன் ஒரே ஸ்க்ரீனில் நடிகக் வாய்ப்பு கிடைக்கவில்லைதான். ஆனால் இன்று அவரை நேரில் பார்த்தது உண்மையிலேயே ஒரு அற்புதமான தருணம். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக அழைத்து சென்றார்கள்.
வெற்றி உங்களுடன்: ஆனால் அவரோ ஒரு நிமிடம் நின்று கவனித்து சில இனிய வார்த்தைகளை பணிவாக பேசினார். விஜய் அவர்களே வெற்றி உங்களுடனேயே இருக்கட்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக 5 ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான கனிகா தொடர்ந்து வரலாறு, எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சில வருடங்களாக எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறார். அது அவருக்கு பெரிய வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.