ஜனநாயகன் லீக்.. எடிட்டரிடம் பேசிய ஆர்.ஜே.பாலாஜி.. என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இணையத்தில் முழு படமும் லீக்காகிவிட்டது. இதில் முதலில் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது பலரது சந்தேகம் வலுத்தது. ஆனால் அவர் வெளியிடவில்லை என்பது உறுதியானது. இருப்பினும் இந்தக் குற்றத்துக்கு அவரது அலட்சிய போக்கும் ஒரு காரணம் என சொல்லி எடிட்டர்கள் சங்கம் அவரை சஸ்பெண்டும் செய்தது.
விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது ஜனநாயகன். அதன் காரணமாக ரிலீஸை பண்டிகையாய் கொண்டாட தயாரானார்கள் ரசிகர்கள். ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கெல்லாம் சென்று பார்த்தது படக்குழு. அங்கெல்லாம் எதுவும் சாதகமாக நடக்கவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறுதணிக்கைக்கு அனுப்பியது. அப்போதும் அதிகாரிகள் பார்க்காமல் இழுத்தடிக்க; முழு திரைப்படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது.

உச்சக்கட்ட அதிர்ச்சி: தியேட்டருக்கு வராத, சென்சார் சான்றிதழ் பெறாத ஒரு படம் லீக்கானது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, சிவகார்த்திகேயன், ஜீவா உள்ளிட்டோர் எல்லாம் படக்குழுவுக்கு ஆதரவாக நின்றார்கள். இப்படி ஒரு செயலை செய்தவர்களை ஈவிரக்கமின்றி கைது செய்ய வேண்டு என்று கொந்தளித்தார்கள். ஒருதரப்பினரோ வெளியான ப்ரிண்ட்டில் இருந்த வாட்டர் மார்க்கை வைத்து எடிட்டர் பிரதீப் ராகவ்வை நோக்கி கைகளை நீட்டினார்கள்.
திட்டவட்ட மறுப்பு: ஒருகட்டத்தில் எல்லோருமே அவர்தான் இப்படி செயலை செய்திருப்பார் என்று நம்பவே ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த எடிட்டர்கள் சங்கம், பிரதீப்புக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது விளக்கி உறுதி செய்தது. மேலும் அன்னபூர்ணா ஸ்டூடியோஸுக்கு படம் சென்றபோது லீக்காகியிருக்கலாம் எனவும் விளக்கியது. இதனையடுத்து ப்ரீ லான்ஸ் எடிட்டர் உள்ளிட்ட சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்கள். படமானது இந்த மாதத்திலேயே ரிலீஸாகிவிடும் என தெரிகிறது.
பிரதீப் நீக்கம்: இந்த சம்பவத்தில் பிரதீப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என்பது மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும்; அவரது அலட்சிய போக்கையும் சிலர் கண்டித்தார்கள். சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவரை தன்னுடன் வைத்திருந்ததால் இப்படி ஒன்று நடந்துவிட்டது என்று சொல்லி சஸ்பென்ட் செய்துவிட்டார்கள். இது ஒருவகையில் பிரதீப்புக்கு நிம்மதிதான். எங்கே அவர் மீது ஒட்டுமொத்த குற்றத்தையும் சுமத்திடுவார்களோ என்று குடும்பத்தினர் பயந்து போயிருந்தார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி பிரதீப் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
பிரதீப் பற்றி பாலாஜி: அவர் அளித்த பேட்டியில், "பிரதீப் ராகவ்வை எனக்கு நன்றாக தெரியும். ரொம்பவே டேலண்ட்டான ஆள். நேற்று இரவுகூட அவரிடம் பேசினேன். அப்போது நாங்கள் எல்லாம் உன்னுடன்தான் இருக்கிறோம் என நம்பிக்கை கொடுத்தேன்" என்றார். இதைப் பார்த்த ரசிகர்கள், ஆர்.ஜே.பாலாஜிக்கு உண்மையில் நல்ல மனது. எல்லோரும் கைவிட்ட நிலையில் பிரதீப்பை தொடர்புகொண்டு நம்பிக்கையாக பேசியதற்காகவே அவர் நன்றாக இருப்பார் என்று வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.