ரவி மோகன் சொன்னது எல்லாமே பொய்.. அவருக்கு என்ன அழுத்தமோ தெரியல.. ஆர்த்தியின் அம்மா மறுப்பு!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய மனவேதனைகளையும் கஷ்டங்களையும் சந்தித்ததாகவும், நான் நடித்து சம்பாதித்த பணத்தைக்கூட என்னால் பயன்படுத்த முடியாது. என்னை ஒரு அடிமைபோல் வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையே வேண்டாம் என்று சொத்து, பணம் என அனைத்தையும் விட்டுவிட்டு வெளியே வந்தேன்" என்றும் மிகவும் மனம் உடைந்து பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா பேட்டி அளித்துள்ளார்.
அதில், இன்று காலை நடந்த விஷயம் மிகவும் அவதூறானது. அவர் கூறிய அனைத்து விஷயங்களும் ஏற்கனவே ஒன்றரை வருடங்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் கூறிய விஷயங்களையே தற்போது மேடை போட்டு சொல்லி இருக்கிறார். ஏற்கனவே மறைமுகமாக பல பொய்யான அவதூறுகள் பரப்பப்பட்டு வந்தன. இருந்தாலும், சட்டரீதியான விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால், அவருக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டதென்று தெரியவில்லை, இன்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். நான் அவர் போல அழ மாட்டேன், உணர்ச்சிவசப்பட்டு பேசவும் மாட்டேன். ஏனெனில், நான் எந்தவிதமான தவறும் செய்யவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி நான் எதுவும் பேசக்கூடாது. கண்டிப்பாக இவை அனைத்திற்கும் ஆதாரங்களுடன் கூடிய விரைவில் பதில் அளிப்பேன்.

சுஜாதா பேட்டி: குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மனவலிமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் பல விஷயங்களை பொறுமையாக சகித்துக் கொண்டு இருக்கிறோம். என் பேரனுக்கு இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு. அந்த பையனின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். என் பேரன் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். அந்த பிள்ளைகளுக்கு என்ன துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. பார்க்கக்கூடாத விஷயங்களையும் பார்த்துவிட்டார்கள், கேட்கக்கூடாத விஷயங்களையும் கேட்டுவிட்டார்கள்.
எல்லாமே பொய்: இதற்கு மேல் என் பேரக்குழந்தைகளுக்கு மனஉளைச்சல் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. அவர் கூறிய அனைத்து பொய்யான அவதூறுகளுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக பதில் அளிப்பார்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறுகளுக்கும் நான் பதில் அளிப்பேன். ஏற்கனவே நீதிமன்றத்தில் அவர் கூறிய அதே விஷயத்தை தான் இன்று கூறி வருகிறார். தற்போது மேடையில் இதை பேச வேண்டிய அழுத்தம் என்ன ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. அதேபோல், குழந்தைகளை பார்க்கக்கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. அந்த விஷயத்திலும் அவர் பொய் கூறியுள்ளார். இருந்தாலும் தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் தயாரிப்பாளர் சுஜாதா அந்த பேட்டியில் கேட்டுக்கொண்டார்.