’மொத ராத்திரி’க்கு ரெடியான யூத் ஹீரோயின்.. அடேங்கப்பா இவ்வளவு ஸ்பீடா?
சென்னை: இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ், 'புஷ்பா', 'குட் பேட் அக்லி' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ச்சியாக தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை உருவாக்கி வரும் இந்நிறுவனம், தற்போது தனது படைப்புலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது 'மொத ராத்திரி' என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட இந்த எண்டர்டெயின்மெண்ட் திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மே 1, 2026) மாலை தனது சமூகவலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன், 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகை அனிஷ்மா அனில்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இளம் திறமையாளர்களைக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம்.
அனிஷ்மா அனில்குமாரின் 'மொத ராத்திரி': குட் பேட் அக்லி, டியூட் படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு அட்டகாசமான படத்தை கொடுக்க முன் வந்துள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ். தெலுங்கை தாண்டி தற்போது தமிழில் 3வது படத்தை தயாரிக்கிறது. மலையாள நடிகையான அனிஷ்மா அனில்குமார் சிறை, யூத் படங்களில் ஹீரோயினாக கலக்கிய நிலையில், முட்ட கலக்கி தற்போது 'மொத ராத்திரி'க்கு ரெடியாகிவிட்டார்.
மொத ராத்திரி என்ன மாதிரியான படம்?: வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஓர் இரவு, இரு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என அந்த ஒரே இரவு எப்படி எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதே 'மொத ராத்திரி'யின் சுவாரஸ்யமான மையக்கரு.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பகிர்ந்துகொண்டதாவது, "பிரம்மாண்டமான எண்டர்டெயின்மெண்ட் கதைகளைத் தயாரிக்கும் அதே சமயம், அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையிலான வலுவான கதைகளையும் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறோம். திறமையான புதியவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் எப்போதும் வாய்ப்புண்டு."
அவர் மேலும் கூறுகையில், "'மொத ராத்திரி' திரைப்படத்தின் கதையை இயக்குநர் ராஜா கருப்பசாமி சொன்னபோதே இதுபோன்ற தனித்துவமான என்கேஜிங் கதைகளை பெரிய திரையில் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தோம்."
"இளம் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது. இதுபோன்ற உற்சாக அனுபவம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம்" என்று நவீன் யெர்னேனி நம்பிக்கை தெரிவித்தார்.
படம் பக்காவா வரும்: இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்துகொண்டதாவது, "மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலானது. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது."
அவர் தொடர்ந்தார், "படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு 'மொத ராத்திரி' திரைப்படம் நிச்சயம் தரும்."
"என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி" என இயக்குநர் ராஜா கருப்பசாமி தன் நன்றியைத் தெரிவித்தார்.
ஈர்க்கும் கதை, புதிய திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என 'மொத ராத்திரி' திரைப்படம் ரசிகர்களுக்கு புதுமையான அதேசமயம் முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க உள்ளது. படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.